ஆடி பெயர் வந்தது எப்படி தெரியுமா
ஆடி பெயர் வந்தது எப்படி தெரியுமா?
ஆடி என்பது ஒரு தேவமங்கையின் பெயர் என்கிறது புராணம். ஒரு சமயம் பார்வதி தேவி, ஈசனைப் பிரிந்து தவம் செய்யும் நிலை ஏற்பட்டது. சிவபெருமான் தனிமையில் இருப்பதை அறிந்த ஆடி என்னும் தேவகுல மங்கை பாம்பு உருவம் எடுத்து, கயிலையின் உள்ளே யாரும் அறியா வண்ணம் நுழைந்தாள். பிறகு பார்வதி தேவியாக உருமாறி சிவபெருமான் அருகில் சென்றாள். அப்போது ஒரு கசப்பான சுவையை சிவபெருமான் உணர்ந்தார். தன்னை நோக்கி வந்தவள் பார்வதி அல்ல என்பதை அறிந்து, தன் சூலாயுதத்தால் ஆடியை அழிக்க துணிந்தார். அப்போது சூலாயுதத்திலிருந்து வெளிப்பட்ட தீப்பொறி ஆடியை புனிதமடைய செய்தது.
அவள் ஈசனை வணங்கி, ஒரு நிமிடமாவது தங்கள் அன்பான பார்வை என்மீது பட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நடந்துகொண்டேன். என்னை மன்னித்தருள வேண்டும் என்று வேண்டினாள். ஆனால், சிவபெருமான் என் தேவி இல்லாத சமயம் நீ அவளைப்போல வடிவம் எடுத்து வந்தது தவறு. எனவே, பூவுலகில் கசப்பு சுவையுடைய மரமாக பிறப்பாய் என்றார்.
அவள் விமோசனம் கேட்க, கவலை வேண்டாம்... நீ மரமாகிப் போனாலும் ஆதிசக்தியின் அருளும் உனக்கு கிட்டும். சக்தியை வழிபடுவதுபோல் உன்னையும் வழிபடுவார்கள். ஆடியாகிய உன் பெயரிலேயே ஒரு மாதம் பூலோகத்தில் அழைக்கப்படும். அந்த வேளையில் நீ கசப்பு குணம் கொண்ட மரமாக இருந்து மக்களுக்கு நல்லதை செய்வாய் என்று அருளினார்.
ஆடி என்ற தேவலோகத்துப் பெண் தான் பூலோகத்தில் வேப்ப மரமாக திகழ்கிறாள். ஈசனின் சாபமே அவளுக்கு வரமாக மாறியது. தெய்வம்சம் பொருந்திய வேம்பு ஆதிசக்தியின் அம்சமாக உள்ளது. நோய்கள் பலவற்றை குணமாக்கும் சக்தி கொண்டவளாக திகழ்ந்தாள் அந்த மங்கை.
ஆடி மாத சிறப்புகள் :
ஆடி மாதத்தில் வரும் நான்கு செவ்வாய்க்கிழமைகளிலும், அம்மன் கோவில்களுக்கு சென்றால் எண்ணிய காரியம் ஈடேறும். இந்நாளில், பெண்கள் அதிகாலையில் குளித்து, குலதெய்வ வழிபாடு நடத்திய பின் துர்க்கை அம்மன், முருகன் கோவில்களுக்கு சென்று வழிபடுவது சிறப்பு.
வசதியுள்ளவர்கள், கடைசி செவ்வாய்க்கிழமை அன்று குழந்தைகளை வீட்டுக்கு வரவழைத்து அவர்களை தெய்வமாக வழிபட்டு விருந்தளிக்கலாம். ஆடி செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கள கௌரி விரதம் கடைபிடிப்பதாலும் விசேஷ பலன்கள் கைகூடும்.
ஆடி மாதம் துளசி வழிபாடு அரிதான பல பலன்களை தரும். ஆடி மாதம் வளர்பிறை நாட்களில் துளசியை வழிபட்டு வந்தால், ஐஸ்வர்யம் பெருகும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.
ஆடி வெள்ளி வழிபாடு செய்வது சகல பாக்கியங்களையும் அள்ளித்தரும். திருமண பாக்கியம் கைகூடி வரும். புதுமண தம்பதியருக்கும், நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் எதிர்பார்த்திருப்போருக்கும் நல்ல அறிவாற்றல், புத்தி சாதுர்யத்துடன் கூடிய குழந்தை பாக்கியம் உண்டாகும். சுமங்கலிப் பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும், திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் கூடி வரவும் விரதம் மேற்கொள்கின்றனர்.
ஆடி மாதத்தின் கடைசி வெள்ளி விஷ்ணு பகவானின் மனைவியான மகாலட்சுமிக்கு உரியது. திருமணமான பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரித்து, நீண்ட நாட்கள் சுமங்கலியாக இருப்பதற்கு ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையின்போது நோன்பு இருந்து, மகாலட்சுமிக்கு பூஜை செய்து, படையல் படைத்து, சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுப்பார்கள்.
Comments
Post a Comment